போப்பாண்டவர் இறந்துவிட்டார்
உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க மக்களுக்கு
சோகத்தை ஏற்படுத்தும் வகையில், போப் என்று அழைக்கப்படும் போப்பாண்டவர், திருத்தந்தை
“பிரான்சிஸ்” ஏப்ரல் 21 ஈஸ்டர் அதிகாலை காலமானார். அவருக்கு வயது 88. இவரது மரணம் எனக்கு மோரிஸ் வெஸ்ட் என்ற எழுத்தாளரை நினைவுபடுத்தியது.
நான் பள்ளியில்
படித்தபோது என் வகுப்பில் கிறித்துவர்கள் இருந்ததில்லை. கல்லூரியில் படிக்கும் காலத்தில்
நான் ஒருநாள் ஒரு வீட்டில் சென்று குடிக்க தண்ணீர் கேட்டேன். அவர்கள் தண்ணீர் கொண்டுவரும்
முன்னர் நான் மயங்கி விழுந்துவிட்டேன். அதோடு நான் என் பேண்டிலேயே மலம் கழித்துவிட்டேன்.
எனக்கு நினைவு திரும்பியபொது, நான் சுத்தமான ஆடைகள் அணிந்து ஒரு கட்டிலில் படுத்துகிடந்தேன்.
நான் எழுவதைப் பார்த்து ஒரு பெண்மணி அருகில் உள்ள ஒரு பெண்ணைப் பார்த்து “மெடில்டா,
சீக்கிரம் பால் கொண்டுவா” என்று சொன்னார். நான் உடனே “மெடில்டாவா? நீங்க கிறிஸ்டியன்ஸா?“
எனக் கேட்டேன். ஆம் என்று அவர்கள் சொன்னார்கள். உடனே அவர்கள் தண்ணீர் கொடுத்தார்கள்.
பின்னர் உங்க் தந்த பெயரென்ன எனக் கேட்க, நான் வைத்தீஸ்வரன் எனச் சொன்னேன். அவர்கள்
நீ ஐயரா? எனக் கேட்டார்கள். நான் ஆம் எனச்
சொன்னேன்.
உடனே பக்கத்துவீட்டில் இருந்த ஒரு ஐயர் வீட்டில்
இருந்து சாதமும் தயிரும் வாங்கி வந்து சாப்பிடச் சொன்னார்கள். சாப்பிட்டுவிட்டு என்
உடல் நிலை சற்று தேரியதால் நான் ஊருக்குச் செல்கிறேன் எனக் கிளம்பினேன்.
அதன் பின்னர் அந்தக் குடும்பம் எனக்கு நெருங்கிய
நண்பர்களாகிவிட்டனர். அடுத்த பத்துவருடம் அவர்களோடு தொடர்பிலிருந்தேன். அதில் ஒரு பெண்
(மெடில்டா) கிறித்துவுக்குத் தன்னை அர்பணித்துக் கொண்டார். அவர் “நன்” ஆவதற்கு முன்னார்
பெங்களூருவில் ஒரு மடத்தில் ஓராண்டுகாலம் தனிமைத்தவத்தில் இருந்தார். அந்த மடத்திற்கு
ஆண்கள் செல்லக் கூடாது. ஆனால் நான் அந்த மடத்தின் தலைமைச் சகோதரியிடம் மெடில்டா அக்காவைக்
காண அனுமதி கேட்டேன். அவரும் அனுமதி தந்தார். அவர் “நன்: ஆகின்ற அந்தத் திருநாளில்
பநுகொள்ள எனக்கு அனுமதி தரப்பட்டது. நான் முதன் முறையாக ஒரு கிறித்துவ நிகழ்ச்சி ஒன்றில்
அப்போதுதான் கலந்து கொண்டே.
அதற்குச் சில நாள் கழித்து, அலுவலக நண்பர்
ஒருவர் மூலமாக கிறித்துவத்தில் கத்தோலிக்க மதம், ப்ராட்டஸ்டண்ட் மதம், இன்னும் சிறிய
சிறிய மதப் பிரிவுகள் உண்டு எனத் தெரிந்துகொண்டேன். அச்சம்யத்தில்தான் மேரிஸ் வெஸ்ட்
எழுதிய ஒரு புதினத்தைப் படிக்க நேர்ந்தது.
மோரிஸ் வெஸ்ட் ஒரு ஆஸ்திரேலிய எழுத்தாளர்.
அவர் எழுதிய அந்தப் புதினத்தின் பெயர் “தி
ஷீஸ் ஆஃப் தெ ஃபிஷர்மேன்” என்பதாகும். இவர் பிற்காலத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்து வந்தார்.
சிறிது காலம் வாடிகனில் ஒரு பத்திரிகையாளராக இருந்தார்.
இந்தப்புத்தகத்தில் எனக்குப் பிடித்த விஷயம்
என்னவென்றால் The Pope is dead என்ற வரி. புதினம் இந்த வரியோடுதான் தொடங்கும். அதன்
பின்னர் ஒவ்வொரு நாலு பத்திகளுக்குப் பிறகும் இந்த வரி தொடரும். புத்தகத்தில் போப்பாண்டவர்
எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை மிக விரிவாக மேரிஸ் வெஸ்ட் சொல்லியிருப்பார்.
புதினத்தின் இந்த முதல் பகுதியால் ஈர்க்கப்பட்டு
நான் ஒரு சிறுகதை எழுதினேன். அந்தக் கதையின் பெயர் “வசீகரன் இறந்துவிட்டார்”.
இதோ கதையைக்
கீழே தருகிறேன். படித்துவிட்டு உங்களின் கருத்தைச் சொல்லுங்கள்.
டாக்டர்
வசீகரன் இறந்துவிட்டார்
டாக்டர்
வசீகரன் இறந்துவிட்டார். வசீகரனுக்கு வயது 50. அதிகாலையில்
நெஞ்சுக்குள் ஏதோ செய்வதுபோல உணர்ந்தார். வாயுத் தொல்லையாக
இருக்கும் என்று நினைத்து ஒரு ஜெலுசில் மாத்திரையை வாயில் போட்டுச் சப்பினார். "காலைல சாப்பிட்டதும் உடனே டாக்டர்கிட்டே
போய் செக் பண்ணிடணும்," என்று மனதில்
நினைத்துக்கொண்டார். சிறிதளவு நீர் அருந்திவிட்டு படுத்துக் கொண்டார். மீண்டும்
அவர் எழும்பவே இல்லை.
அவருக்கு முதலில் நெஞ்சில் வலி ஏற்பட்டு கைகள், முதுகு ஆகிய பகுதிகளில் பரவியது. மார்பின்
நடுப்பக்கத்தில் வலி உருவாகி, அது கைகள், கழுத்து மற்றும் முதுகு ஆகியவற்றுள் ஏதாவது ஒரு பகுதிக்கு
பரவினால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்பது அவருக்கு மறந்துபோனது.
மத்திரை போட்டு, தண்ணீர் குடிப்பதற்குள் நெஞ்சு வலி அதிகரித்தது. நெஞ்சு வலியோடு
வியர்வை, தலைசுற்றல்
மற்றும் மயக்கம் வருவது போல இருந்தது. மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தது.
வசீகரனுக்கு பத்து ஆண்டுகளாக சர்க்கரை
நோய், இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம், அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தது. மருந்து மாத்திரைகள்
சாப்பிடுகிறார். அவர் புகை பிடிப்பார். ஒரு நாளைக்கு ஐந்து. அதை அவரால் நிறுத்த முடியவில்லை.
அவர் புகை பிடிப்பது அவரது மனைவிக்குத் தெரியாது என அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அவரது மனைவி அதைக் கண்டு கொள்வதில்லை. அவளும் ஒரு அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள்.
அவளது அலுவலகத்தில் ஒரு கடைநிலை ஊழியர் இருக்கிறார். அவர் கடந்த ஐம்பது வருடங்களாகப்
புகை பிடிக்கிறார். எல்லா விதமான நோய்களும், குடும்பப் பிரச்சனைகளும் அவருக்கு உண்டு.
ஆனால் புகையும் கையுமாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
வசீகரனின் மகன் ஒரு அரசு அலுவலகத்தில் அறிவியலாளராக
இருக்கிறார். திருமணமாகிவிட்டது. அவன் மனைவி அதே அலுவலகத்தில் ஹிந்தி மொழிபெயர்ப்பாளராக
வேலை பார்க்கிறாள். வசீகரனின் மகள் ஒரு பல் டாக்டர். அவளது கணவன் ஒரு பேதாலஜிஸ்ட்.
ஒரு பெரிய மருத்துவமனையில் பேதாலாஜி துறையின் தலைவராக உள்ளான். வசீகரன் இறப்பதற்கு
முதல் நாள் இவர்கள் அனைவருமே வசீகரன் இருந்த வீட்டில் இருந்தனர்.
வசீகரனின் மனைவி (பெயர் சுனிதா) வசீகரனுடன் ஒரே
அறையில் ஒரே படுக்கையில்தான் படுக்கிறாள். ஆனால் வசீகரன் இறந்துவிட்டதை அவள் உணரவில்லை.
காலையில் எழுந்து, கழிப்பறைக்குச் சென்று, காலைக் கடன்களை முடித்துவிட்டு மீண்டும்
அறைக்கு வந்தபோது வசீ படுத்திருக்கும் விதம் அலங்கோலமாக இருந்ததைப் பார்த்தாள். அருகே
போய் அவரது கையைத் தொட்டாள் ஜில்லென்று இருந்தது. உடனே முத்து, மணிமேகலை எனக் கத்தினாள்.
முத்து அவள் மகன். மணிமேகலை அவளது மகள்.
டாக்டர்
வசீகரன் இறந்துவிட்டார். இந்த விஷயம் முத்துவுக்கு காலை ஆறு மணிக்குத்தான் தெரிந்தது.
காலையில் அவன் அம்மா கூப்பிடுகிறாள் என அவன் மனைவி வாசுகி சொன்னாள். அவன் எழுந்து அம்மாவின்
அறைக்குச் சென்றான். சிறிது நேரத்தில் மணிமேகலை வந்தாள். வந்தவள் அப்பாவின் நாடி பிடித்துப்
பார்த்தாள். உடனே எழுந்து சென்று அவளது கணவன் அய்யப்பனைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தாள்.
அவனும் மாமனாரின் நாடி பிடித்துப் பார்த்துவிட்டு, அவர் இறந்து இருபது நிமிடங்கள் ஆகிறது
என்றான். “நான் என்னுடைய மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்சை வரவழைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு
வெளியில் போகுமுன் முத்துவிடம் “இன்னிக்கு நம்முடைய பிளான் எல்லாம் கேன்சல்” என்று
இரகசியமாய் சொல்லிவிட்டுச் சென்றான்.
மணிமேகலைக்கும்
அய்யப்பனுக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு குழந்தைகள் இதுவரை
இல்லை. தற்போது மணிமேகலை தாயாகப் போகிறாள், மூன்றாவது மாத மருத்துவப் பரிசோதனைக்குச்
சென்று வந்துவிட்டாள். அய்யப்பன் வேலை பார்க்கும் மருத்துவமனையிலேயே பார்த்துக்கொள்கிறாள்.
மணிமேகலைக்குத் திருமணம் நடந்த ஆறு மாதத்தில் முத்து-வாசுகி திருமனம் நடந்தது. அவர்களுக்கும்
இதுவரை விசேஷம் எதுவும் இல்லை. இதனால் அய்யப்பனையும் வாசுகியையும் உறவினர்கள் மிகுந்த
மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டனர். சஷ்டி விரதம் இரு, அந்தக் கோயிலுக்குப் போ, இந்தக்
கோயிலுக்குப் போ என ஏகப்பட்ட அட்வைஸ். டாக்டர் வசீதான் வீட்டிலேயே இரண்டு டாக்டர்கள்
இருக்கின்றனர். அவர்களிடம் பேசுங்கள் எனக் கூறினார். அதன்படி முத்து அய்யப்பனிடம் பேசினான்.
அய்யப்பன் அவனையும் வாசுகியையும் இன்று மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லவிருந்தான்.
ஆனால் அதைக் கேன்சல் செய்ய வேண்டும். இந்த துக்க நிகழ்ச்சிக்கு வரும் முத்து-வாசுகி
இருவரின் உறவினர்கள் ஏன் விசேஷம் எதுவும் இல்லையா என்ற கேள்வியை இன்றும் இரகசியமாய்க்
கேட்கப்போகிறார்கள். அம்மா மீண்டும் டென்சனாகப் போகிறார்கள்.
டாக்டர்
வசீகரன் இறந்துவிட்டார். சுனிதாவால் நம்ப முடியவில்லை. நேற்று இரவுகூட புதுமணத்
தம்பதிபோல இருவரும் . . . . சே என்ன வாழ்க்கையிது. நாளைக் காலையில் செத்துப்போகப் போறான்னு
யாராவது எனக்கு முன்னாடியே சொல்லியிருக்கக் கூடாதா? அவளுக்கு அழுகை வரவில்லை. இன்னமும்
செய்தி யாருக்கும் சரியாகச் சொல்லப்படவில்லை. மருமகள் வீட்டை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள்.
மருமகனும் மகனும் வசீகரன் உடலுடன் மருத்துவமனை சென்றிருந்தனர். உடலை படுக்கையிலிருந்து
தூக்கும்போதுதான் சுனிதா வசீ மூக்கிலிருந்தும் காதுகளிலிருந்தும் இரத்தம் வழிந்திருப்பதைப்
பார்த்தாள். அவளும் வசீயும் ஒருமுறை விமானத்தில் பயணம் செய்தபோது வசீ காது வலியால்
துடித்துப் போய்விட்டான். அது இப்போது நினைவுக்கு வந்தது.
காலை
எழுந்ததும் வசீ அவர்கள் வீட்டு நாயை அழைத்துக்கொண்டு நடைப் பயிற்சிக்குப் போவார். மணிமேகலை,
முத்து இருவரும் ஒருமுறை தங்களுடைய ஜோடிகளோடு எங்கோ பயணம் போய்விட்டனர். வசீ, சுனிதா
இருவருக்கும் நேரம் போகவில்லை அப்போது வாங்கியது அந்த நாய். அதன் பெயர் அசோகன். நாயை
வீட்டிற்கு வாங்கி வந்தபோது முத்து, தான் அசோகருடைய கல்வெட்டு ஒன்றை புவனேஸ்வரம் அருகில்
படித்துக்கொண்டிருப்பதாகப் போன் செய்தான். அதனால் நாய்க்கு அசோகன் என்று வசீ பெயர்
வைத்துவிட்டார். ஏனெனில் ஒரு வீட்டு நாய்க்கு பெயர் வைக்கக்கூட இப்போதெல்லாம் யோசிக்க
வேண்டியிருக்கிறது.
அசோகனை
இன்னமும் வெளியில் கொண்டு போகவில்லை. இல்லைன்னா அவன் வராண்டாவில் காலைக் கடன்களைக்
கழித்துவிடுவான். ட்ரைவர் ஜானி இன்னமும் வரலையா? என்ன ஆனான்?
ஜானகிராமன்
என்கிற ஜானி, அய்யப்பன் சார் மருத்துவமனையில் இருந்தான். அய்யப்பன் அவனை அங்குதான்
வரச்சொல்லியிருந்தார். மருத்துவமனைக்கு வந்துவிட்டான். அய்யப்பனுக்கு இரண்டு முறை போன்
செய்தான், அவர் எடுக்கவில்லை. கார் மருத்துவமனை போர்டிகோ அருகில் இருந்தது. எனவே அவன்
வரவேற்பறையில் அமர்ந்திருந்தான். அப்போது அங்கே முத்து வந்தார். அவனைப் பார்த்து,
“ஜானி, அய்யா போயிட்டாருடா.” என்றார். ஜானி அதிர்ந்துபோனான். இன்னிக்கு அய்யாவுக்கு
மீனாட்சி கல்லூரியில் ஒரு மீட்டிங் இருக்கு. எனவே வசீ சார் அவனை சீக்கிரம் வரச்சொல்லியிருந்தார்.
இப்படியாயிடுச்சே. அப்போது முத்து போனில் பேசிக்கொண்டே அருகில் வந்து, “உன்னை அம்மா
வீட்டுக்கு வர்ச்சொல்றாங்க. நீ வீட்டுக்குப் போ.” என்றான். ஜானி மருத்துவமனையை விட்டு
வெளியில் வந்து, ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
வராண்டாவில்
அசோகன் அவனைப் பார்த்து “கூய்ங்” என்று கத்தியது. மணிமேகலையம்மா வெளியில் போனோடு வந்தார்கள்.
இவனைப் பார்த்ததும் “அசோகனை வெளியில் அழைச்சிட்டு போ” என்றார்கள். சரிம்மா என்று சொல்லிவிட்டு
ஜானி அசோகனிடம் வந்தான். அசோகன் அவனைப் பார்த்து வாலை ஆட்டியது.
“வாடா
வா. காலையிலிருந்து இந்த வீட்டில் என்னை யாரும் எட்டிக்கூடப் பார்க்கல. வசீ சார் இருந்தால்
என்னை வெளியில் அழைத்துப் போவார். எனக்கு குடிப்பதற்கு என் கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றுவார்.
அதை நான் அடிக்கடி கடித்து வைத்திருப்பதால் மேல் பகுதி எல்லாம் ஓட்டை ஓட்டையாக இருக்கிறது.
அதனால் அவர் என்பக்கத்தில் அமர்ந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நீர் ஊற்றுவார். அந்தத்
தண்ணீரைக் குடித்துவிட்டு பின்னர் அவரோடு வாக்கிங் போனால் ஃப்ரீயாக காலை கடன்களெல்லாம்
முடித்துவிடலாம். அதன் பிறகு அவர் காபி குடிப்பார். டபராவில் இருக்கும் காபியை டம்ப்ளரில்
ஊற்றி அவர் குடிக்கும்போது நான் அவர் கையின் மீது என் காலை வைத்து பரிதாபப் பார்வையுடன்
ஒரு கூயிங் சப்தம் எழுப்புவேன். உடனே அவர் அம்மாவைப் பார்த்து கத்துவார். “முதல்ல அசோகனுக்கு
பால் ஊற்றிவிட்டு எனக்கு கொடுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். நீ கேக்க மாட்டேன்
என்கிறாயே” என்பார்.
காலையிலேயே
அவரை எங்கேயோ அழைத்துச் சென்றுவிட்டார்களே. என்னாயிற்று என அசோகன் புலம்பியது யாருக்கும்
கேட்கவில்லை.
டாக்டர்
வசீகரன் இறந்துவிட்டார்.
இந்த செய்தி கதிரவனுக்கு எட்டு மணிக்குத்தான் தெரிந்தது. கதிரவன் டாக்டர் வசீகரனின்
தனி உதவியாளன் போல. அவர் பின்னாலேயே அவன் நிற்க வேண்டும். அவர் சொல்லும் வேலையை எல்லாம்
அவன் செய்யவேண்டும். ஆனால் டாக்டர் வசீகரன் மிகவும் திறமையானவர். இன்று ஒருநாளில் மட்டும்
அவருக்கு ஆறு நிகழ்ச்சிகள் உள்ளன. முதல் நிகழ்ச்சி மீனாட்சி கல்லூரியில் பருவநிலை
மாற்றத்தினைச் சமாளிக்க சென்னை தயாராக உள்ளதா? என்ற தலைப்பில் பேச உள்ளார். பின்னர்
சென்னை வானொலி நிலையத்தில் தாமஸ் ஆல்வா எடிசன் பற்றியும் லவாய்சியர்
பற்றியும் பதினைந்து நிமிடத்திற்கான இரண்டு உரைகளை பதிவு செய்ய உள்ளார். சென்னை அறிவியல்
மன்றத்தில் காலநிலை நோக்கில் ஞாலம் என்ற தலைப்பில் மாணவர்களிடையே பேச உள்ளார்.
மாலை ரோட்டரி கிளப்பில் அவதார புருஷன் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கிறார்.
இதற்கிடையில் வெளிநாட்டிலிருந்து வருகின்ற இரு குழுக்களைச் சந்திக்க இருக்கிறார். எல்லா
நிகழ்ச்சிகளையும் இப்போது கேன்சல் செய்ய வேண்டும்.
கதிரவன்
ஒவ்வொருவராய் அலைபேசியில் அழைக்கத் தொடங்கினான். அவன் அழைத்த ஒவ்வொருவரும் அதிர்ச்சியை
வெளியிட்ட பின்னர் உடனேயே நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.
கதிரவன் வீட்டினுள் சென்றான். வசீயின் உடல் அங்கே ஹாலில் கிடத்தப் பட்டிருந்தது. அய்யப்பன்
அவனை அழைத்து “என் ஹாஸ்பிடலைக் கூப்பிட்டு பத்து நாட்களுக்கு என்னால் வர முடியாதுன்னு
சொல்லு.” என்றான். வாசுகி, முத்துவிடம் அடுத்த நாள் நடக்கவிருந்த ஹிந்தி செமினார் எப்படி
நடக்கும் எனப் பேசிக் கொண்டிருந்தாள். மணிமேகலை தன் வயிற்றிலிருக்கு கருவுக்கு ஒண்ணும்
ஆயிடாதில்ல என்று அவளுடைய டாக்டரிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
சுனிதா,
அசோகன் கழுத்தில் கையைப் போட்டுக்கொண்டு வசீகரன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கதிரவன் நடு ஹாலில் போய் நின்றான். “என்ன எல்லாரும் மூலைக்கு மூலை போய் உட்கார்ந்திருக்கிறீர்கள்?
ஆக வேண்டிய காரியத்தைப் பார்க்க வேண்டாமா?” என்று உரத்த குரலில் கேட்டான். எல்லோருக்கும்
வசீகரனே திரும்பி வந்துவிட்டது போலிருந்தது.
இவ்வளவு
நேரம் சும்மாயிருந்திருக்கிறோம். வசீகரன் இருந்திருந்தால் அனைவரையும் ஓட ஓட விரட்டியிருப்பார்.
அவரவர் தங்களது கடமைகளைச் செவ்வனச் செய்திருப்பர். இன்று அவர் இல்லை. யெஸ் டாக்டர்
வசீகரன் இறந்துவிட்டார்.