Thursday, September 22, 2016


நாள், மாதம், ஆண்டு- நாட்காட்டிகள்

                நாட்காட்டிகள் உலகம் முழுவதுமே காலத்திற்கேற்ப செழுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதே நாள்காட்டியை- நாள்காட்டி அமைப்பை இன்று எவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கவில்லை.. நாள்காட்டிக்கும் நடைமுறைக்கும் வேறுபாடு ஏற்படுவது கண்டு பல நாடுகளின் பல பண்பாட்டுக் குழுவினர் தமது நாள்காட்டியைச் சரிசெய்து வந்திருக்கின்றனர்.

                கோடை காலத்தே கிடைக்கும் அதே உணவு மழைக்காலத்திலோ அல்லது குளிர் காலத்திலோ கிடைக்காது.  நெய்தல் நிலத்தில் கிடைக்கும் உணவு மருதத்தில் கிடைக்காது. எனவே பருவகாலம் மற்றும் இடம்/வெளி சார்ந்து நமது உணவு வேறுபட்டு அமைந்துள்ளது எனச் சொன்னால் அது மிகையாகாது. இவ்வாறு, மனிதனின் ஆதிகாலம் முதலே காலம் மற்றும் இடம் இரண்டும் நம் மீதும் நமது வாழ்க்கை மீதும் தாக்கம் செலுத்தியுள்ளது. வேறுவார்த்தையில் கூறப்போனால் மனிதராகிய நாம் அனைவரும் வெளி மற்றும் காலம் (space and time) சார்ந்து தான் வாழ்கிறோம். இதில் வெளி என்பது வீடு, தெரு, ஊர் நாடு என பல பிரிவுகளில் நாம் பகுத்துஅறிகிறோம். காலம் என்ற அம்சத்தை அளந்து பிரித்து அறிய உதவும் கருவியே நாள்காட்டி.

நாளைக் கணக்கிடுதல்

                நாள்காட்டிகளின் தயாரிப்பு இன்று நேற்று தொடங்கியதல்ல. மனித நாகரிகம் தொடங்கிய பழைய கற்காலம் முதலே நாள்காட்டிகள்  ஏற்படுத்தப்பட்டன. நாள்காட்டி என்பது நாள், மாதம், ஆண்டு என காலப்பொழுதின் பிரிவுகளைக் காட்டும் கருவி. இதில் நாள் என்பதனை இயல்பாக எளிதாக அறிய முடியும். இன்று நாம் நடு இரவு பன்னிரண்டு மணி முதல் புதிய நாள் துவங்குவதாகக் கொள்கிறோம். ஆனால் முன் காலத்தில் சூரியன் உதயத்திலிருந்து மறு உதயம் வரை ஒரு நாள் எனக் கணித்தனர். இன்றும் நமது பஞ்சாங்கங்கள் இந்த முறையைப் பின்பற்றுகின்றன. இன்று கடிகாரம் என்கிற யந்திரம் நம்மிடையே வந்த நிலையில் நள்ளிரவிலிருந்து அடுத்த நாள் நள்ளிரவு வரை ஒரு நாள் என வகுப்பதில் அவ்வளவு சிக்கல் இல்லை. ஆனால் கடிகாரம் இல்லாத முற்கால சூழலில் எளிதில் சூரிய உதயம் தான் புலப்பாட்டில் அமைந்தது. எனவே பட்டறிவு சார்ந்த சூரிய உதயம் தான் அந்த காலத்தில் நாளின் தொடக்கம் எனக் கொள்ளப்பட்டது.



மாதத்தைக் கணக்கிடுதல்

                நாள் என்பதை எளிதில் அறிய முடிகிறது; அளவிட முடிகிறது. ஆனால் மாதம் என்பது என்ன? உலக வரலாற்றில் எங்கும், எல்லா கலாச்சாரத்திலும், முற்காலத்தில் நிலவின் இயக்கம்தான் மாதம் எனும் காலப்பிரிவை சுட்டி நின்றது. தமிழில் மாதம் என்பதை திங்கள் என்றும் கூறுவர். திங்கள் என்றால் நிலவு என்று பொருள்.. அதுபோல ஆங்கில மன்த்”  என்ற சொல்லும் லத்தின்மொழியில் நிலவு (மூன்) எனும் பெயரிலிருந்து உருவானதே. ரிக்வேதம், “சந்த்ரமா மாச கிரியாஎனக் கூறுகிறது. அதாவது சந்திரன் தான் மாதத்தை தோற்றுவிக்கிறான் என்பது பொருள். உலகெங்கும் பல மொழிகளில் மாதத்தைக் குறிக்கும் சொல்லானது நிலவு என்று பொருள் தருவதாகவே உள்ளது என்பது கவனிக்க வேண்டிய செய்தி.

                மாதம் என்பது நிலவின் இயக்கத்தை அதாவது முழுநிலவு முதல் அடுத்த முழுநிலவு வரையிலான நாட்களைக் குறிக்கிறது. நிலவின் வளர்பிறை, தேய்பிறை இயக்கம் தான் மாதம். ஒரு முழு நிலவிலிருந்து மறு முழுநிலவுவரை அல்லது ஒரு அமாவாசையிலிருந்து அடுத்த அமாவாசை வரை ஒரு மாதம். கற்காலத்திலும் எளிதில் நிலவின் இயக்கத்தை பட்டறிய முடிந்தது. எனவே மாதம் என்ற கருத்து முற்காலந்தொட்டே இருந்து வந்துள்ளது என்பது இயல்பு.



ஆண்டினைக் கணக்கிடல்

                மாதம் என்பதற்கு அடுத்து உள்ள பெரும் கால பொழுது ஆண்டு என்பதாகும். நாள் என்பது சூரியன் (நமது பார்வைக்கு) பூமியை சுற்றும் பொழுது. மாதம் என்பது நிலவின் வளர்பிறை- தேய்பிறை இயக்கம் நிலவு பூமியை சுற்றிவரும் காலம். ஆண்டு என்பது என்ன என்ற கேள்விக்கு பன்னிரெண்டு மாதம், 365 நாட்கள் என குழந்தைகள் கூட கூறிவிடுவர்.. ஏன் 10 மாதங்கள் இல்லை?  365 என்பதற்குப் பதிலாக ஏன் 200 அல்லது 300 நாட்கள் தான் ஒருவருடம் என்று வைத்துக்கொண்டால் என்ன பிரச்சனை? உள்ளபடியே ஆண்டு என்பது புவியின்  இயக்கத்தை சார்ந்த கருத்து ஆகும்.

                இன்று ஆண்டு என்பது பூமி சூரியனை சுற்றிவர எடுக்கும் காலம்என்று பள்ளிக் குழந்தைகள் கூட எளிதில் விடை கூறுவர். ஆனால் பூமி கோள வடிவானது; தன்னை தானே சுற்றுகிறது, சூரியனை வலம் வருகிறது என்பது எல்லாம் நவீன கருத்துகள். பண்டைய உலகில், கற்காலத்தில் எப்படி ஆண்டு என்பதை அளவீடு செய்தனர்? அந்த காலத்தில் ஒரு ஆண்டில் சுமார் 365 நாட்கள் உள்ளன என எப்படிக் கணித்தனர் என்பது  நாம் அறிய வேண்டிய தகவலாகும்.

                முதலில் ஆண்டு என்பது 12 மாதங்கள் என்று ஏன் கூறப்பட்டது என்பதை காண்போம். அதற்கு இரவு வானில் நிலவு பவனி வரும் பாங்கைப் புரிந்து கொள்ளவேண்டும். இன்று ஒரு விண்மீன் அருகே தென்படும் நிலவு நாளை அதே விண்மீன் அருகே காட்சி தராது. வேறு ஒரு புதிய விண்மீன் அருகே தென்படும். இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு நட்சத்திரத்திற்கு அருகில் காட்சி தரும். 27 நாட்களுக்குப் பிறகு நிலவு அதே முதல் நட்சத்திரத்திற்கு  மறுபடி வந்து சேரும்.  அதாவது சுமார் 27  நாட்கள் கடந்த பின்னர் அதே முதல் விண்மீன் அருகே நிலவு காட்சி தரும். அதாவது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விண்மீன் அருகே காட்சி தரும் நிலவு 27 நாட்களில் விண்மீன் பின்புலத்தில் ஒரு சுற்று சுற்றி வந்துவிடும். இந்த 27 நாட்களில் நிலவு எந்தெந்த விண்மீன் அருகே தென்படுகிறதோ அதுவே அந்த நாளின் நட்சத்திரம். அதாவது இன்று நிலவு பரணி விண்மீன் அருகே நிலை கொண்டால் இன்று பரணி நட்சத்திரம். அடுத்த நாள் வேறு ஒரு நட்சத்திரம். இவ்வாறு அசுவதி, பரணி, என 27 விண்மீன்கள் இனம் காணப்பட்டு முற்கால இந்தியச் சமுதாயத்தில் 27 நட்சத்திரங்கள் வகுக்கப்பட்டன. இந்த 27 நாட்கள் நட்சத்திர மாதம் எனக் கொள்ளப்பட்டது.

                தேய்- வளர்பிறை காட்டும் நிலவு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரம் என நகர்ந்து வரும்போது ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் முழு நிலவாக இருக்கும் அல்லவா? ஒரு குறிப்பிட்ட மாதத்தில் சித்திரை விண்மீனில் நிலவு உள்ளபோது முழு நிலவாக இருப்பதாக கொள்வோம். அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என பெயரிட்டனர். அதாவது சித்திரை மாதத்தில் முழு நிலவு தோன்றும் நாள் சித்திரை நட்சத்திரமாக இருக்கும் (சில இந்திய நாட்காட்டிகளில் முழுநிலவு அல்லது அம்மாவாசை கொண்டு மாதம் குறிக்கப்படுகிறது). சித்திரை நட்சத்திரத்தில் முழு நிலவு அமைந்தபின் அடுத்த மாதம் விசாக நட்சத்திரத்தில் முழுநிலவு ஏற்படும். அது விசாக மாதம்- அல்லது வைகாசி. இவ்வாறு தான் மாதங்களின் பெயர்கள் உருவாயின. சித்திரை, வைகாசி, ஆனி.. என மாதங்களின் பெயர்கள் ஏற்பட்டது இவ்வாறுதான்.

முழுநிலவும் நட்சத்திரங்களும்

மாதத்தின் பெயர்
பௌர்ணமியில் வரும் நட்சத்திரம்
சித்திரை
சித்திரை
வைகாசி
விசாகம்
ஆனி
அனுஷம்
ஆடி
பூராடம் அல்லது உத்திராடம்
ஆவணி
திருவோணம்
புரட்டாசி
பூரட்டாதி அ உத்திரட்டாதி
ஐப்பசி
அஸ்வினி
கார்த்திகை
கிருத்திகை
மார்கழி
மிருகசீடம்
தை
பூசம்
மாசி
மகம்
பங்குனி
உத்திரம்

     சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தின் பெயர் கொண்டுள்ளது. வைகாசி விசாக நட்சத்திரத்தின் பெயரால் வருகிறது. ஆனி அனுஷம் வடமொழியில் அனுஷி ஆனி. ஆடி பூராடம் அல்லது உத்திராடம் வடமொழியில் பூர்வ ஆஷாடம் மற்றும் உத்திர ஆஷாடம் ஆஷாடிதான் ஆடி. ஆவணி திருவோணம் வடமொழியில் ஸ்ராவனம் ஸ்ராவணி தான் ஆவணி.

     புரட்டாசி பூரட்டாதி அல்லது உத்திரட்டாதி வடமொழியில் பூர்வ ப்ரோஷ்டபம் அல்லது உத்திர ப்ரோஷ்டபம்- ப்ரோஷ்டபடி தான் புரட்டாசி. ஐப்பசி அஸ்வினி வடமொழியில் ஆச்யுவஜி ஐப்பசி. கார்த்திகை கார்த்திகை. மார்கழி மிருகசீரிடம் வடமொழியில் மிருகசீர்ஷம் மிருகசீர்ஷிதான் மார்கழி. தை -புனர்பூசம்/ பூசம் வடமொழியில் புஷ்யம் என்றும் திஷ்யம் என்றும் வரும். திஷ்யதில் இருந்து தை. மாசி மகம் வடமொழியில் மாக் மாகிதான் மாசி. பங்குனி பூரம் அல்லது உத்திரம் வட மொழியில் பூர்வ பல்குனி அல்லது உத்திர பல்குனி பல்குனியில் இருந்து பங்குனி.

                ஒரு தடவை கார்த்திகை விண்மீனுக்கருகில் முழுநிலவு ஏற்பட்டால், மறுமுறை அதே நிகழ்வு- கார்த்திகை நட்சத்திரத்தில் முழுநிலவு என்ற நிலை அடைவது சரியாக பன்னிரெண்டு மாதங்கள் கடந்த பின்னர் தான் என முற்காலத்தில் உற்று நோக்கல் மற்றும் பட்டறிவு மூலம் அறிந்தனர். அதாவது வேறு வகையில் கூறப்போனால் மொத்தம் இருபத்து ஏழு நட்சத்திரங்கள் இருந்தாலும், 12 நட்சத்திரங்கள்அருகே மட்டுமே நிலவு முழு நிலவு (அல்லது அமாவசை) நிலை ஏற்படுகிறது என்ற சிறப்பு செய்தியை முற்காலத்தில் உற்று நோக்கல் வழி உலகெங்கும் உள்ள பண்பாட்டில் அறிந்தனர். வேத காலத்திற்குமுன்பே கற்காலம் சார்ந்த பழங்குடி மக்கள் நிகோபரி முதலிய மக்கள்- இதனை அறிந்திருந்தனர். இந்தியாவிற்கு வெளியே பல நாகரிகங்களும் இதனை அறிந்திருந்தன. எனவே தான் உலகெங்கும் உள்ள எல்லா நாட்காட்டிகளிலும் 12 மாதங்கள் உள்ளன.

பகலிரவுச் சமநாள்
     என் மகன் பள்ளியில் படிக்கும்போது அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் ஜனாதிபதி ஜியார்ஜ் வாஷிங்டன் அவர்களின் பிறந்தநாள் என்ன ? என என்னிடம் கேட்டான். நான் இணையத்தில் தேடி அவரின் பிறந்தநாள் 11 பிப்ரவரி 1731 என்று அவனிடம் கூறினேன். அடுத்தநாள் பள்ளியிலிருந்து வந்து என்னோடு அவன் தகராறு செய்தான். உங்களுக்கு விடை தெரியாது என்றால் என்னிடம் தெரியாது என்று சொல்லியிருக்கலாம், அதை விட்டுவிட்டு ஜியார்ஜ் வாஷிங்டன் அவர்களின் பிறந்தநாள் என தவறான விடையை ஏன் கூறினீர்கள் என என்னிடம் கண்ணீர் மல்கச் சொன்னான். என் புத்தகத்தில்கூட அவரின் பிறந்தநாள் 22 பிப்ரவரி 1732 என்றுதான் போட்டுள்ளது எனக்கூறினான். எனக்கு மிகவும் குழப்பமாக இருந்த்து. அவனைச் சமாதானப்படுத்திவிட்டு மீண்டும் இணையத்தில் தேடினேன். ஜூலியன் காலண்டர், கிரிகேரியன் கேலண்டர், கத்தோலிக்க மதம், ப்ரொடஸ்டண்ட் மதம், இங்கிலாந்து அரச வமிசம் என பல செய்திகளைச் சொல்லி, ஜியார்ஜ் வாஷிங்டன் அவர்களின் பிறந்தநாள் 11 பிப்ரவரி 1731 என்று இருந்தது ஆனால் 22 பிப்ரவரி 1732 என்று மாறிவிட்டது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

     எனக்குத் தலைசுற்றியது. ஆனால் இந்தக் குழப்பத்திற்குக் பூமி 23½° சாய்வு அச்சில் தன்னைத்தானே சுழலுவதும் நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றுவதும்தான் காரணமாகும். இந்த இரண்டு இயக்கங்களால் இரவு, பகல், பருவகாலங்கள் ஏற்படுகின்றன.

ரசியப் புரட்சியை அக்டோபர் புரட்சி என்கிறோம். ஆனால் கொண்டாடுவது நவம்பர் 7இல். ஏன் தெரியுமா? அயன சக்கிர சலனத்தால்தான். இதன் தொடர்ச்சியாக ஆங்கில-ஐரோப்பியநாள்காட்டியும் பிழை கண்டது. ஈஸ்ட்டர் திருநாள் ஞாயிற்றுக்கிழமை தான் ஏற்படவேண்டும். புனித வெள்ளி வெள்ளிக்கிழமை தான் ஏற்படவேண்டும். இவை நிலை தவறியது. எனவே தான் கிரோகோரி எனும்போப்பாண்டவர் ஐரோப்பிய நாள்காட்டியை சீர் செய்தார். அதன் தொடர்ச்சியாக சுமார் பதினோரு நாட்கள் விடுபட செய்து நாள்காட்டி செய்யப்பட்டது. இவ்வாறு சீர்திருத்த பட்ட இன்றைய ஆங்கில நாட்காட்டிஇன்றைய நடைமுறை வான இயக்கத்தோடு பொருந்தி வருகிறது.

புரட்சிக்கு முன்பு ரஷ்யாவில், ஐரோப்பாவில் பயன்படுத்தத் துவங்கி இருந்ததும், பத்தாம்பசலி பிற்போக்கு ஜார் அரசு சீர்திருத்த நாட்காட்டியை பயன்படுத்தவில்லை. கடவுள் கொடுத்தநாள்காட்டியை மனிதன் எப்படி மாற்றுவது என்றிருந்தனர்.. ஆனால் லெனின் புரட்சிக்கு பிறகு செய்த முதல் காரியங்களில் ஒன்று சீர்திருத்த நாட்காட்டியை ஏற்றுக்கொண்டது தான்.

ஆதனால் தான் ரஷ்யப்புரட்சி நடந்தபோது இருந்த பழமை நாள்காட்டியில் அக்டோபர் 26 – எனவே அக்டோபர் புரட்சி எனப் பெயர். ஆனால் புரட்சிக்குப் பிறகு அறிவியல் பூர்வ சீர்திருத்தநாள்காட்டி வந்த பின் நவம்பர் 7. அதனால் தான் அக்டோபர் புரட்சியை நவம்பர் மாதத்தில் கொண்டாடுகிறோம்.


     சூரியன் எங்கே உதிக்கும் என்ற கேள்விக்கு நாம் அனைவரும் கிழக்கு என பதில் கூறுவோம். ஆனால் சூரிய உதயத்தை கவனமாக உற்று நோக்கினால் எல்லா நாளும் சூரியன் மிகச் சரியாகக் கிழக்கில் உதிப்பதில்லை என்பது புலப்படும். ஆண்டில் இரண்டே இரண்டு நாள் தான் சூரியன் மிகச் சரியாக கிழக்கில் உதயமாகிறது. வேனில் காலத்தில் மார்ச் 21 அல்லது 22ஆம் நாள் மற்றும் குளிர் காலத்தில் செப்டம்பர் 21அல்லது 22 ஆகிய நாட்களில் தான் சூரியன் மிகச்சரியாக கிழக்கில் உதிக்கும்.

     மற்ற நாட்களில் சூரிய உதயம் வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் இருக்கும். எடுத்துக்காட்டாக மார்ச் 21 அன்று மிகச்சரியாக உதய புள்ளி கிழக்கில் இருக்கும். ஆனால் அதற்கு அடுத்தநாள் வடகிழக்கில் உதய புள்ளி அமையும். அதற்கும் அடுத்த நாள் மேலும் உதய புள்ளி வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு வடக்கு நோக்கி நகரும் உதய புள்ளி உச்சபட்ச வடக்கு திசையில் ஜூன் 21 அன்று நிலைகொள்ளும். அதன் பின் சூரிய உதய புள்ளி தெற்கு நோக்கி விலகும். இதனை தான் தட்சிணாயணம் என்பர். அதாவது சூரியனது உதய புள்ளியின் தென்திசை ஓட்டம். தெற்கு நோக்கி நகரும் உதய புள்ளி மறுபடி செப்டம்பர் 21 அல்லது 22 சரியாக கிழக்கு திசையில் அமையும். மேலும் தென்திசை நகர்வு தொடர்ந்து உச்சபட்ச தென்திசை உதயம் டிசம்பர் 21 அல்லது 22 அன்றுநிகழும். அதன் பின் சூரிய உதய புள்ளியின் நிலை வடக்கு நோக்கி செல்ல துவங்கும். இதுவே உத்தராயணம்.  சூரிய உதய புள்ளியின் வட திசைச் செலவு.

     சூரியன் மிகச்சரியாக கிழக்கில் உதிக்கும் அந்த இரண்டு நாட்கள் மட்டும்தான் இரவு மற்றும் பகல் பொழுதுகள் சமமாக இருக்கும். ஏனைய நாட்களில் பகல் பொழுது நீண்டோ அல்லது இரவுபொழுது நீண்டோ அமையும். எனவே மார்ச் 21 அல்லது 22 செப்டம்பர் 21 அல்லது 22 ஆகிய இந்த இரண்டு நாட்களை சம இரவு பகல் நாள் என்பர்.

     உத்தராயண சூரிய புள்ளி நகர்வின் போது, இந்திய போன்ற வடகோள புவி பகுதியில், நேற்றையதை விட இன்று பகல்பொழுது காலம் கூடுதலாக அமையும். இன்றையதை விட நாளை பகல்பொழுது காலம் கூடுதலாக அமையும். இதற்கு நேர் மாறாக தக்ஷிணாயண காலத்தில் பகல் பொழுதுகாலம் நாள்பட குறைந்து வரும். துருவப்பகுதிகளில் ஆறுமாதம் பகல் ஆறுமாதம் இரவு என இருக்கும். உத்தராயண காலம்தான் வடதுருவத்தில் பகல். தட்சிணாய காலம் வடதுருவத்தில் இரவு. தென்துருவ பகுதியில் இதற்கு நேர்மாறாக இருக்கும் என்பதை சொல்ல தேவையில்லை.

     ஆக சூரிய இயக்கத்தில்சரியாக கிழக்கில் உதிக்கும் இரண்டு நாட்கள் [மார்ச்21/22, செப்டம்பர் 21/22], உச்சபட்ச வடகிழக்கு உதய புள்ளி (தட்சிணாயணம்- கதிர் திருப்ப நாள் மே 21/22) உச்சபட்ச தென்கிழக்கு உதயபுள்ளி (உத்தராயணம் - கதிர் திருப்ப நாள் டிசம்பர் 21/22) ஆகிய நான்கு நாட்கள் சிறப்பானவை.

     வருடம் முழுவதும் பகல் 12 மணி நேரம், இரவு 12 மணிநேரம் சமமாக இருப்பதில்லை. சில மாதங்களில் பகல் பொழுது நீண்டதாகவும், சில மாதங்களில் இரவு மிக நீண்டதாகவும் இருக்கும்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் 22 -க்குப்பின் பகலின் நேரம் குறைந்து இரவின் நேரம் அதிகமாகத் தொடங்கும். இது படிப்படியாக அதிகரித்து டிசம்பர் 22 -ல் 'வின்டர் சாலிடிஸ்' என்று சொல்லக்கூடிய பகலின் அளவு மிகக் குறைந்த அளவாகவும், இரவின் அளவு மிக அதிகமாகவும் இருக்கும். மீண்டும் இதே போன்ற சுழற்சி திரும்பத் திரும்ப வரும்.

வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பூமியின் எல்லா பாகங்களிலும் சமமான இரவும், சமமான பகலும் இருக்கும். ஒவ்வொன்றும் 12 மணி நேரமாக இருக்கும். இத்தகைய நாட்களையே சம பகலிரவு நாட்கள் என்கிறார்கள். வசந்த காலத்தில் ஏற்படும் சம பகலிரவு நாள் மார்ச் 21. அன்று இது நிகழ்ந்து வசந்தகாலத்தை தொடங்கி வைக்கும். இது பூமியின் வடபகுதியில் நிகழும். தென்பூமியில் இதை இலையுதிர் காலம் என்று அழைக்கிறார்கள்.

இலையுதிர்காலத்தில் சம - பகலிரவு நாள் செப்டம்பர் 23 அன்று நிகழும். வட பாதி கோளத்தில் இலையுதிர் காலமாகவும், தெற்கில் வசந்தகாலமாகவும் இருக்கும். இந்த இரண்டு நாட்களிலும் பூமியினுடைய பூமத்திய ரேகை சரியாக சூரியனை நோக்கி இருக்கும். ஆகவே வட, தென் பூமியின் பாகங்கள் சமமான இரவும், பகலும் கொண்டிருக்கும். இதை வைத்தும் நிறைய கோவில்களிலும், பிரமிடுகளிலும் மத சம்பந்தமான சம்பிரதாயங்களை உருவாக்கி உள்ளார்கள்.

உதாரணமாக எல்காட்டியோ என்ற பிரமிடில் அன்றைக்கு சூரியன் மறையும் பொழுது அதனுடைய படிகளின் மீது விழும் நிழலும் அந்த சூரிய ஒளியின் கிரகணங்களும் ஏறத்தாழ வளைந்து நெளிந்து செல்லக்கூடிய பாம்பின் தலையில் வைரத்தை வைத்தது போல, இருக்கும்படி அமைத்தார்க.

குளிர் காலத்தின்போது, சூரியன் தாழ்வாக தெற்கு கோளத்தில் இருக்கும். அப்போது பகலை விட இரவு பொதுவாக அதிகமாக இருக்கும்.

அடுத்து வசந்தகாலம் வரும். அப்போது இரவும் பகலும் ஏறத்தாழ சமமாக இருக்கும். சூரியன் சற்றே மேல் வந்திருக்கும். அதன் பிறகு கோடைகாலம். அப்போது பகல் அதிகமாகவும் இரவு குறைவாகவும் இருக்கும். கடைசியாக இலையுதிர் காலம். அப்போதும் ஏறத்தாழ இரவும், பகலும் சம அளவு கொண்டதாகவே இருக்கும்.